‘சட்டி சுட்டது; கை விட்டது’ என்றொரு பழமொழி உண்டு. கொதிக்கின்ற சட்டியைப் பற்றித் தூக்கிய கை அனிச்சையாக அதைப் போட்டுவிடுவதைப் போல ஆசை என்னும் கொதிக்கின்ற சட்டியைக் கைவிட பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தஇந்தப் பாடலில் வேண்டுகிறார். ‘தொண்ணூற்றாறு தத்துவங்களுக்கும் அடையாளச் சின்னமாக விளங்குகிற மோனநிலையை எய்த வேண்டும்’ என்றும் வேண்டுகிறார்.
அமைப்பு முறையில் இப்பாடல் ஒற்றொழித்து அடிக்கு 22 எழுத்துகளைக் கொண்டது. ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களின் இரண்டாமெழுத்து வல்லொற்று; ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களின் கடைசி எழுத்தும் இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களின் முதலெழுத்தும் நெடில்.
தத்ததனா தான தத்ததனா தான
தத்ததனா தான தனதான
சுட்டதுபோ லாசை விட்டுலகா சார
துக்கமிலா ஞான சுகமேவிச்
சொற்கரணா தீத நிற்குணமூ டாடு
சுத்தநிரா தார வெளிகாண
மொட்டலர்வா ரீச சக்ரசடா தார
முட்டவுமீ தேறி மதிமீதாய்
முப்பதுமா றாறு முப்பதும்வே றான
முத்திரையா மோன மடைவேனோ
எட்டவொணா வேத னத்தொடுகோ கோவெ
னப்பிரமா வோட வரைசாய
எற்றியஏ ழாழி வற்றிடமா றாய
எத்தனையோ கோடி யசுரேசர்
பட்டொருசூர் மாள விக்ரமவே லேவு
பத்திருதோள் வீர தினைகாவல்
பத்தினிதோள் தோயு முத்தமமா றாது
பத்திசெய்வா னாடர் பெருமாளே.