இது பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த பாடல். ஒரே ஈற்றடியைக் கொண்டு, ஒரே சந்தத்தில் பல தலங்களுக்கும் பொது வரிசைக்கும் எனச் சில பாடல்கள் வருவதுண்டு. இது அந்த வகையைச் சேர்ந்தது. இந்த வரிசையில் ‘எற்றா வற்றா’, ‘மெய்ச்சார்வற்றே’ போன்ற சில பாடல்களைப் பார்த்திருக்கிறோம். இவை அனைத்திலும் ‘முத்தா முத்தி யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே’ என்ற ஈற்றடி ஒன்றே போல மகுடமாக வரும். உடல்மீது வைக்கின்ற பற்றிலும் உலக இன்பங்களிலும் முழுகி அழிந்துபோகாத நிலையை இப்பாடல் கோருகிறது.
அமைப்பு முறையில் அவற்றைப் போலவே இதுவும் அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்டது; ஒவ்வொரு சீரிலும் இரண்டாமெழுத்து வல்லொற்று; மூன்றாமெழுத்து நெடில். ஒவ்வொரு ஆறாம் சீரிலும் இரண்டு, நான்கு ஆகிய இரண்டெழுத்துகளும் வல்லொற்று.
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் தனதான
பத்தே ழெட்டீ ரெட்டேழ் ரட்டால்
வைத்தே பத்திப் படவேயும்
பைப்பீ றற்கூ ரைப்பா சத்தா
சற்கா ரத்துக் கிரைதேடி
எத்தே சத்தோ டித்தே சத்தோ
டொத்தேய் சப்தத் திலுமோடி
எத்தே நத்தா பற்றா மற்றா
திற்றே முக்கக் கடவேனோ
சத்தே முற்றா யத்தா னைச்சூர்
கற்கா டிக்கற் பணிதேசா
சட்சோ திப்பூ திப்பா லத்தா
அக்கோ டற்செச் சையமார்பா
முத்தா பத்தா ரெட்டா வைப்பா
வித்தா முத்தர்க் கிறையோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் பெருமாளே.