சிறியதும் மிக உருக்கமானதுமான இந்தப் பாடலை மதுரையம்பதிக்கானது என்று உரையாசிரியர் தணிகைமணி வ சு செங்கல்வராய பிள்ளையவர்கள் குறித்திருந்தாலும், இது பவானி தலத்தைக் குறிக்கிறது என்று சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை, சேலம் பதிப்பு குறிக்கிறது. இப் பாடலில் ‘கூடல்’ என்று குறிக்கப்படுவது, மதுரையைச் சொல்வது போலிருந்தாலும், இத்தலத்திற்கு ‘பவானிகூடல்’ அல்லது ‘திருவாணிகூடல்’ என்ற பெயரும் உண்டென்றும்; காவிரி, பவானி, சிறுவாணி ஆகிய நதிகள் சங்கமிப்பதால் இதற்கு ‘வானிகூடல்’, ‘பவானி முக்கூடல்’ என்றும் பெயர்கள் இருப்பதாகவும் தெரிய வருகிறது. ‘
பந்தார் விரல்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி
அந்தார் அரவணிந்த அம்மானிடம் போலும் அந்தண்சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டுபாடச்
செந்தேன் தெளியொளிரத் தேமாக்கனி யுதிர்க்குந் திருநணாவே.
என்று தொடங்கும் திருஞான சம்பந்தருடைய (இரண்டாம் திருமுறை, 72ம் திருப்பதிகம்) இத்தலத்துக்கானது. இத்தலத்தைத்தான் சம்பந்தர் ‘திருநணா’ என்று குறிப்பிடுகிறார்.
அடிக்கு ஒற்றொழித்துப் பத்தெழுத்துகளைக் கொண்ட பாடல்; முதல் சீரும் மூன்றாம் சீரும் நான்கெழுத்துகளைக் கொண்டவை; இவற்றில் மூன்றாமெழுத்து நெடில்; இரண்டாம் சீரும் நான்காம் சீரும் இரண்டெழுத்துகளைக் கொண்டவை; இவற்றில் முதலெழுத்து நெடில்.
தனதான தானத் தனதான
கலைமேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் கடலேறிப்
பலமாய வாதிற் பிறழாதே
பதிஞான வாழ்வைத் தருவாயே
மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் குமரேசா
சிலைவேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் பெருமாளே