பதச் சேதம் | சொற் பொருள் |
எதிர் இலாத பத்தி தனை மேவி
| எதிர் இலாத: நிகரற்ற; |
இனிய தாள் நினைப்பை இருபோதும்
| |
இதய வாரிதிக்குள் உறவாகி
| வாரிதி: கடல்; |
எனது உளே சிறக்க அருள்வாயே
| உளே: உள்ளே, இதயத்திலே; |
கதிர காம வெற்பில் உறைவோனே
|
|
கனக மேரு ஒத்த புய வீரா
|
|
மதுர வாணி உற்ற கழலோனே
|
|
வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே.
| வழுதி: பாண்டியன்—கூன் பாண்டியன்; |
எதிரிலாத பத்தி தனைமேவி... நிகரற்ற பக்தி நிலையை அடைந்து,
இனிய தாள்நினைப்பை இருபோதும்... இனியவையான உன்னுடைய திருவடிகளைச் சிந்திப்பதை பகல், இரவு இரு வேளைகளிலும்,
இதய வாரிதிக்குள் உறவாகி... என் இதயம் என்னும் கடலுக்குள்ளே பதித்தபடி,
எனதுளே சிறக்க அருள்வாயே... (அந்த நினைப்பு) என் உள்ளத்திலே சிறக்கும்படியாக அருள்புரிய வேண்டும்.
கதிர காம வெற்பில் உறைவோனே... கதிர்காமமாகிய மலையில் இருப்பவனே!
கனக மேரு வொத்த புயவீரா... பொன்மேரு கிரிக்கு நிகரான தோள்களை உடைய வீரா!
மதுர வாணி யுற்ற கழலோனே... இன்சொற்களையுடைய சரஸ்வதி நினைத்துப் போற்றுகின்ற திருப்பாதங்களை உடையவனே!
வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே.... கூன் பாண்டியனுடைய கூனை (திருஞான சம்பந்தராக வந்து) நிமிர்த்தி (அவனை நெடுமாறனாக்கிய) பெருமாளே!
சுருக்க உரை:
பொன்மயமான மேரு மலையை ஒத்த தோள்களை உடைய வீரனே! இன்சொற்களை உடைய வாணி தன் மனத்தில் இருத்திப் போற்றும் கழல்களை உடையவனே! (திருஞான சம்பந்தராக வந்து கூன் பாண்டியனுடைய கூனைப் போக்கி அவனை நெடுமாறனாக்கிய)* பெருமாளே!
நிகரற்ற பக்தி நிலையை மேற்கொண்டு உன்னுடைய திருவடிகளை எப்போதும் நினைத்திருக்கவும்; என் உள்ளமாகிய கடலிலே உன் திருவடிகள் பொலிந்து விளங்கவும் அருள்புரிய வேண்டும்.
(* சமணர்களுடன் வாதிட்ட ஞானசம்பந்தர், ‘வாழ்க அந்தணர்’ என்று ஓதிய பதிகத்தில் ‘வேந்தனும் ஓங்குக’ என்று பாடியதால் கூன்பாண்டியன் முன்னும் பின்னுமாக இருந்த இரண்டு கூனும் போய் அகல, நெடுமாறனாக விளங்கலானான்.)