பிறவிப்பிணி அறவேண்டும் என்று கோரும் இப்பாடல் திருவம்பர் தலத்துக்கானது. திருஞான சம்பந்தருடைய பாடல்பெற்ற இத்தலம், தஞ்சை மாவட்டத்தில் பேரளத்துக்கு அருகிலுள்ளது.
அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய சீர்கள் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாய் இரண்டெழுத்துகளையும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளையும் இரண்டு (கணக்கில் சேராத) மெல்லொற்றுகளையும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்கள் நான்கு குற்றெழுந்துகளையும் ஒரு மெல்லொற்றையும் கொண்டு அமைந்துள்ளன.
தான தந்தனந் தான தந்ததன
தான தந்தனந் தான தந்ததன
தான தந்தனந் தான தந்ததன தந்ததான
சோதி மந்திரம் போத கம்பரவு
ஞான கம்பரந் தேயி ருந்தவெளி
தோட லர்ந்தபொன் பூவி ருந்தஇட முங்கொளாமல்
சூது பந்தயம் பேசி யஞ்சுவகை
சாதி விண்பறிந் தோடு கண்டர்மிகு
தோத கம்பரிந் தாடு சிந்துபரி கந்துபாயும்
வீதி மண்டலம் பூண மர்ந்துகழி
கோல மண்டிநின் றாடி யின்பவகை
வேணு மென்றுகண் சோர ஐம்புலனொ டுங்குபோதில்
வேதி யன்புரிந் தேடு கண்டளவி
லோடி வெஞ்சுடுங் காட ணைந்துசுட
வீழ்கி வெந்துகுந் தீடு மிந்தஇட ரென்றுபோமோ
ஆதி மண்டலஞ் சேர வும்பரம
சோம மண்டலங் கூட வும்பதும
வாளன் மண்டலஞ் சார வுஞ்சுழிய டர்ந்ததோகை
ஆழி மண்டலந் தாவி யண்டமுத
லான மண்டலந் தேடி யொன்றதொமு
கான மண்டலஞ் சேட னங்கணயில் கொண்டுலாவிச்
சூதர் மண்டலந் தூளெ ழுந்துபொடி
யாகி விண்பறந் தோட மண்டியொரு
சூரி யன்திரண் டோட கண்டுநகை கொண்டவேலா
சோடை கொண்டுளங் கான மங்கைமய
லாடி இந்திரன் தேவர் வந்துதொழ
சோழ மண்டலஞ் சாரு மம்பர்வளர் தம்பிரானே.