தமிழின் தனித்துவம் மிக்க எழுத்தாளர்களில் சுஜாதாவும் ஒருவர். இவர் மே 3, 1935 அன்று சென்னை திருவல்லிகேணியில் பிறந்தார்.சீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பி.இ (மின்னணுவியல்) கற்றார். அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.
ஆரம்பத்திலிருந்தே எழுத்தில் ஆர்வம் கொண்டிருந்த சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து இயங்கி வந்த 'சிவாஜி' என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்
தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராக உயர்ந்தார். பல்லாயிரக்கணக்கான வாசகர்களை அவர் கவர்ந்துள்ளார்.
அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது. மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா. இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது. சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சுஜாதா அவர்கள் உடல்நலக் குறைபாடுகாரணமாகி சென்னை மருத்துவமனை ஒன்றில் 27.02.2008 அன்று காலமானார்.