தட்சிணாமூர்த்தி என்னும் இயற்பெயர் கொண்ட மு. கருணாநிதி ஜூன் 3, 1924 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் முத்துவேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.
கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14ஆவது அகவையில் இருந்தே சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
பெரியார், அண்ணா ஆகியோருடன் கொண்ட நட்பால் முக்கிய அரசியல் தலைவராக உருமாறினார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தற்பொழுது வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக உள்ளார்
கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார்