சொல்வது நிஜம் (மூத்த ஊடகவியலாளரின் நெஞ்சைச்சுடும் அனுபவங்கள்) - மணா; பக். 216; ரூ.166; சிக்ஸ்த்சென்ஸ், சென்னை-17; )044 - 2434 2771.
பத்திரிகையுலகிலும், தொலைக்காட்சியிலும் நீண்டகால அனுபவம் வாய்ந்தவரான இந்த நூலின் ஆசிரியர் தனது அனுபவங்களின் தொகுப்பாக 34 கட்டுரைகளைத் தொகுத்தளித்துள்ளார்.
சமூகத்தில் படிந்த அழுக்குகளைச் சுட்டிக்காட்டி அதை நீக்க சம்பந்தப்பட்ட துறையினரை பத்திரிகைகள் நிர்பந்திக்க வேண்டும் என்பதை "கால் விலங்கு' கட்டுரையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
சாதனை மனிதர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி, நாகேஷ், பாலசந்தர் போன்றவர்கள் முதல் சாதாரண மனிதர்களான ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட கருணாகரன், சாராய சாம்ராஜ்ய பெண் தாதா மாயக்காள் என சமூகத்தின் அனைத்துப் பகுதியைச் சேர்ந்த மக்களையும் அலசி ஆராய்ந்து நம்மை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர்.
மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமியின் துணிச்சல் பற்றி ஒரு கட்டுரை சொல்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய காவல்துறையால் துகிலுரியப்பட்ட சொர்ணத்தம்மாளும், துகிலுறிந்த காவல்துறை அதிகாரி மீது திராவகம் வீசிய தியாகிகளும் உரிய முறையில் கெளரவிக்கப்படவில்லை என்பதை இன்னொரு கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
நூலாசிரியர் ஒரு திரைக்கதையைக் காட்சிப்படுத்துவது போலவே தமது அனுபவங்களையும், பணிக் களத்தில் சந்தித்த சம்பவங்களையும் எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் சித்திரித்திருப்பது பாராட்டுக்குரியது.