துன்ன ஆடையர் தூ மழுவாளினர்
பின்னு செஞ்சடை மேல் பிறை வைத்தவர்
மன்னு வார் பொழில் சூழ் மணஞ்சேரி எம்
மன்னனார் கழலே தொழ வாய்க்குமே
விளக்கம்
துன்ன ஆடையர் = கிழித்து தைக்கப்பட்ட ஆடையை உடையவர். துன்ன கோவண ஆடையர் என்று பல திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது. எளிமையான ஆடை அணிந்தவராக பெருமான் உள்ள நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது.
பொழிப்புரை
பெரிய துணியிலிருந்து கிழித்து தைக்கப்பட்ட கோவண ஆடையை அணிந்துள்ள பெருமான், தூய்மையான மழுவாளினை ஆயுதமாக கொண்டுள்ளவர்; முறுக்கிப் பின்னப்பட்ட தனது சடையின் மேல், தன்னிடம் சரணடைந்த பிறைச் சந்திரனை வைத்துள்ள அவர், நிலை பெற்ற நீண்ட சோலைகள் சூழ்ந்த மணஞ்சேரி தலத்தின் மன்னனாக உறைகின்றார். அவரது திருவடிகளைத் தொழும் அடியார்களுக்கு, அவர்கள் வேண்டியது வாய்க்கப்பெறும்.