செல்பேசியில் வீணாக நான்கு, ஐந்து மணி நேரம் செலவழிக்கிறார்கள் என்று பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தொழில்முறையிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தாலும் உடல் உழைப்பில் ஈடுபடாமல் என்னால் இருக்கமுடியாது. ஒரு கருத்துக் கணிப்பில், மக்கள் ஒவ்வொரு நாளும் செல்பேசியில் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் செலவழிக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. தொழில்நுட்பமும் சமூகவலைத்தளங்களும் நமக்கு உதவியாக இருப்பதற்குப் பதிலாக கெடுதலாக மாறிவருகின்றன. முக்கியமாகச் செய்யவேண்டியவை குறித்த உணர்வை மக்கள் இழக்கிறார்கள். மன ரீதியான, உடல் ரீதியான மேம்பாட்டுக்குத் தேவையானவை குறித்தும் யோசிக்க மறுக்கிறார்கள்.
எது முக்கியம் என்பதை மாணவர்கள் வகுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஓர் ஒழுங்கைக் கொண்டுவரவேண்டும். உடல்பயிற்சிக்கு என்ன செய்யவேண்டும், எப்போது சமூகவலைத்தளங்களில் நேரம் செலவழிக்க வேண்டும், எப்போது வீடியோ கேம்ஸ் விளையாட வேண்டும், எப்போது வீட்டுப்பாடம் செய்யவேண்டும் போன்றவை குறித்த சரியான திட்டமிடல் வேண்டும்.
நல்ல உடற்தகுதியுடன் இருக்கும்போது என்னால் நன்கு யோசிக்க முடிகிறது. ஒரு தெளிவு உள்ளது. கவனத்துடன் ஈடுபடமுடிகிறது. உடல் பலத்துடன் இருக்கும்போது உங்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படும். உங்களைப் பற்றி நல்லவிதமாக எண்ணவைக்கும். நல்ல எண்ணங்களுக்கு நீங்கள் நல்லவிதமாக உணரவேண்டும் என்று கூறியுள்ளார்.