திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான ரோல் பால் போட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் மதுரை அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.
மாநில அளவிலான 14 வயதுக்குள்பட்டோருக்கான ரோல் பால் போட்டிகள், திண்டுக்கல் அருகிலுள்ள அனுகிரஹா பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு ரோல் பால் சங்கம் மற்றும் திண்டுக்கல் ரோல் பால் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இப்போட்டியில், திண்டுக்கல், மதுரை, தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 20 ஆடவர் அணிகளும், 11 மகளிர் அணிகளும் பங்கேற்றன.
லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மகளிர் பிரிவில் மதுரை, திண்டுக்கல் அணிகளும், ஆடவர் பிரிவில் மதுரை, கடலூர் அணிகளும் போட்டிக்கு முன்னேறின.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் இறுதிப் போட்டியில் மதுரை அணி 3-2 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. பின்னர் நடைபெற்ற ஆடவர் இறுதிப் போட்டியில் மதுரை அணி 3-2 என்ற கோல் கணக்கில் கடலூர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு ரோல் பால் சங்க தலைவர் ஆவன் செந்தில்குமார் சுழற்கோப்பையை வழங்கினார்.