11-ஆவது எஃப்ஐஹெச் இளையோர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி லக்னெளவில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
இளையோர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறுவது இது 2-ஆவது முறையாகும். புது தில்லியில் கடந்த 2013-ஆம் ஆண்டு 10-ஆவது உலகக் கோப்பை போட்டி நடைபெற்ற நிலையில், தொடர்ந்து 2-ஆவது முறையாக இந்த முறை லக்னெளவில் நடைபெறுகிறது.
மொத்தம் 4 பிரிவுகளில் 16 அணிகள் இந்தப் போட்டியில் மோத உள்ளன. நுழைவு இசைவு (விசா) தொடர்பான உறுதியான தகவல்கள் அளிக்காத காரணத்தால் பாகிஸ்தான் அணியை போட்டியில் இருந்து சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எஃப்ஐஹெச்) நீக்கியுள்ளது. அதற்குப் பதிலாக மலேசிய அணி சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியின் "டி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் கனடாவை எதிர்கொள்கிறது. இதர பிரிவுகளில், நியூஸிலாந்து-ஜப்பான், ஜெர்மனி-ஸ்பெயின், இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன.
தொடர்ந்து நடைபெறவுள்ள ஆட்டங்களில் இந்தியா வரும் 10-ஆம் தேதி இங்கிலாந்தையும், 12-ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவையும் சந்திக்க உள்ளது.
இந்தியாவைப் பொருத்த வரையில், இளையோர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் கடந்த 2001-ஆம் ஆண்டு பட்டம் வென்றது.
அதன் பின்னர் 15 ஆண்டுகளாக கைக்கெட்டாத கனியாக இருக்கும் உலகக் கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது.
ஹர்ஜீத் சிங் தலைமையில் களம் காணும் இந்திய அணியில், ஸ்டிரைக்கர் மன்தீப் சிங், தடுப்பு ஆட்டக்காரரும், டிராக் ஃப்ளிக்கருமான ஹர்மன்பிரீத் சிங், கோல் கீப்பர் விகாஸ் தாஹியா ஆகிய முக்கியமான வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
அவர்களோடு மற்றொரு தடுப்பு ஆட்டக்காரர் வருண் குமார், ஸ்டிரைக்கர் அர்மான் குரேஷி ஆகியோர் இணைந்துள்ள இந்திய அணி, பயிற்சியாளர் ஹரேந்திர சிங்கின் வழிகாட்டுதலில் தயாராகியுள்ளது.