தென் கொரிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் அஜய் ஜெயராம் தோல்வி கண்டார்.
தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில்
ஜெயராம் 23-25, 13-21 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் லீ ஹியூனிடம் தோல்வி கண்டார்.
44 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் ஒரு கட்டத்தில் ஜெயராம் 14-11 என முன்னிலையில் இருந்தார். பின்னர் அபாரமாக ஆடிய லீ 20-17 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதன்பிறகு ஜெயராம் நெருக்குதல் கொடுக்க, விடாப்பிடியாகப் போராடிய லீ 25-23 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டை மிக எளிதாக 21-13 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார் லீ.