ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் தோனி தொடர்ந்து 4-ஆவது இடத்திலேயே களமிறங்க வேண்டும் என முன்னாள் இந்திய கேப்டன் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தோனி 4-ஆவது இடத்தில் களமிறங்கி விளையாடி வரும் நிலையில், கங்குலி மேலும் கூறியதாவது: தோனி தொடர்ந்து 4-ஆவது இடத்திலேயே களமிறங்க வேண்டும். அங்கிருந்து அவர் ஆட்டத்தை வெற்றியில் முடிக்க வேண்டும். ஆட்டத்தை வெற்றியில் முடிக்கக்கூடிய ஒரு வீரர் 40-ஆவது ஓவருக்குப் பிறகுதான் களமிறங்க வேண்டும் என்று அர்த்தமில்லை. விராட் கோலி இப்போது 3-ஆவது இடத்தில் களமிறங்கி வெற்றி தேடித்தருகிறார். ஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரர் பின்வரிசையில்தான் களமிறங்க வேண்டும் என்பது தவறான உத்தியாகும். எனவே வரக்கூடிய ஆட்டங்களில் தோனி 4-ஆவது வீரராகவே களமிறங்க வேண்டும் என்றார்.
விராட் கோலி குறித்துப் பேசிய கங்குலி, "கோலி தலைசிறந்த வீரர்தான். ஆனால் அவரை மட்டுமே நம்பியிருப்பது என்பது சரியானதல்ல. நியூஸிலாந்தும் தலைசிறந்த அணிதான். அவர்களும் சில ஆட்டங்களில் வெல்லக்கூடும்' என்றார்.