டெஸ்ட்: வெற்றியை நெருங்கும் இந்திய அணி!

கைவசம் 3 விக்கெட்டுகளே உள்ளதால் நியூஸிலாந்து அணியின் தோல்வி உறுதியாகியுள்ளது.
டெஸ்ட்: வெற்றியை நெருங்கும் இந்திய அணி!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது. 434 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி, 5-வது நாள் உணவு இடைவேளையின்போது 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 229 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் கைவசம் 3 விக்கெட்டுகளே உள்ளதால் அந்த அணியின் தோல்வி உறுதியாகியுள்ளது.

கான்பூரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 97 ஓவர்களில் 318 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 65, புஜாரா 62, ஜடேஜா 42 ரன்கள் எடுத்தனர். நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட், மிட்செல் சேன்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைச் சாய்த்தனர். பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து அணி 95.5 ஓவர்களில் 262 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 75, டாம் லதாம் 58 ரன்கள் எடுத்தனர். இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 56 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 107.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 434 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து, 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 37 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்தது. ரோஞ்சி 38, சேன்ட்னர் 8 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

ஆட்டத்தின் கடைசி நாளான இன்று, ரோஞ்சியும் சேன்ட்னரும் திறமையாக இந்திய சுழல்பந்துவீச்சை எதிர்கொண்டார்கள். 120 பந்துகளில் 80 ரன்களில் எடுத்துப் போராடிய ரோஞ்சி, ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகும் நியூஸிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடித்து ஆடி இந்திய அணியைச் சிரமத்துக்கு ஆளாக்கினார்கள். அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவர் மட்டுமே தொடர்ந்து பந்துவீசியதால் கேப்டன் கோலி வேகப்பந்து வீச்சாளர்களிடம் விக்கெட்டுகளை எடுக்கும் பொறுப்பை அளித்தார். அவர் எதிர்பார்த்தபடியே ஷமி வாட்லிங்கின் விக்கெட்டை வீழ்த்தினார். பிறகு, அவருடைய அடுத்த ஓவரில் கிரேக்கை க்ளீன் போல்ட் செய்தார். இந்த இரு விக்கெட்டுகளால் நியூஸிலாந்து அணியின் டிரா திட்டதை முறியடித்தார் ஷமி. 

5-வது நாளின் முதல் பகுதியில் நியூஸிலாந்து வீரர்கள் கடுமையாகப் போராடியும் தக்க இடைவெளியில் இந்திய அணியினர் விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இந்தியாவின் வெற்றி தற்போது உறுதியாகியுள்ளது. நியூஸிலாந்து அணி, 5-வது நாள் உணவு இடைவேளையின்போது 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 229 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் கைவசம் 3 விக்கெட்டுகளே உள்ளதால் அந்த அணியின் தோல்வி உறுதியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com