இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி சென்ற மின்தூக்கி பழுதானது. ஈடன் கார்டன் மைதான ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு அவரை வெளியேற்றினர்.
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான செளரவ் கங்குலி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் முதல் தளத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு மின்தூக்கியில் சென்றார். அப்போது அந்த மின்தூக்கி திடீரென பழுதாகி இரு தளங்கள் இடையே நின்றது.
இதையடுத்து உடனடியாக மின் இணைப்பை துண்டித்த மைதான ஊழியர்கள், பின்னர் மின்தூக்கியின் கதவைத் திறந்தனர். அதைத்தொடர்ந்து மின்தூக்கியில் இருந்த சிறிய இருக்கையின் (ஸ்டூல்) மீது ஏறி கங்குலி வெளியே வந்தார்.
இந்த மின்தூக்கி, 1987-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தபோது ஈடன் கார்டன் மைதானத்தில் பொருத்தப்பட்டதாகும்.
மாலை 5 மணியளவில் மின் இணைப்பு மாற்றப்பட்டதன் காரணமாக மின்தூக்கி பழுதானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மைதான அதிகாரிகள் கூறுகையில், "அந்த பழைய மின்தூக்கியை மாற்றிவிட்டு புதிய நவீன மின்தூக்கியை பொருத்தும் திட்டம் உள்ளது. ஆனால் அதற்கு சிறிது
நாள்கள் ஆகும்' என்றனர்.