சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலிருந்தும் விலக உள்ளார் ராகுல்!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலிருந்தும் விலக உள்ளார் ராகுல்!

ஐபிஎல் போட்டியில் மட்டுமில்லாமல் சாம்பியன்ஸ் டிராபியிலும் விளையாட முடியாத நிலைமை

இது கொஞ்சம் எதிர்பாராத செய்திதான். ஐபிஎல் போட்டியில் மட்டுமில்லாமல் சாம்பியன்ஸ் டிராபியிலும் விளையாட முடியாத நிலைமை கே.எல். ராகுலுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இந்திய தொடக்க வீரர் ராகுலுக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதற்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவிருப்பதால் அவர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார். 24 வயதான ராகுலுக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டபோதும், ஆஸ்திரேலியத் தொடரில் வலியோடே விளையாடி முடித்தார். அந்தத் தொடரில் ராகுல் 393 ரன்கள் குவித்தார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 57-ஆவது இடத்தில் இருந்தார். அந்தத் தொடரில் முறையே 64, 10, 90, 51, 67, 60, 51* ரன்களைக் குவித்ததன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் 11-ஆவது இடத்துக்கு முன்னேறினார். 

தற்போது தன்னால் சாம்பியன்ஸ் டிராபியிலும் விளையாடமுடியாது என்று ராகுல் கூறியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

நான் இன்னும் காத்திருக்க வேண்டும். சாம்பியன்ஸ் டிராபியில் ஆடுவது கடினம்தான். முழுவதுமாகக் குணமாக இரண்டு, மூன்று மாதங்கள் ஆகலாம். புணே டெஸ்ட் போட்டியில் ஓ’கீஃப் பந்தை சிக்ஸ் அடித்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதேபோன்ற ஒரு ஷாட்டை ஆடியபோது அவுட் ஆனேன். அப்போது காயம் இன்னும் மோசமானது. இந்த இரண்டரை வருடங்களில் காயங்களால் நிறைய போட்டிகளில் ஆடாமல் போயிருக்கிறேன். இது வருத்தமளிக்கிறது. இத்தனைக்கும் சரியான உடற்தகுதியுடனும் உணவு, பயிற்சிகளில் ஓர் ஒழுங்கையும் கடைப்பிடிப்பவன். என் பயிற்சியில் என்ன மாற்றம் செய்யவேண்டும் என்பதை இனிமேல்தான் அலசப்போகிறேன் என்று பேட்டியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com