மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 95 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்தது. ரோஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், 138.4 ஓவர்களுக்கு 407 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மிஸ்பா உல் ஹக் அதிகபட்சமாக 99 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷனான் கேபிரியெல், அல்ஸாரி ஜோசஃப் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள், 52.4 ஓவர்களில் 152 ரன்களுக்கு சுருண்டது. கிரன் பாவெல் மட்டும் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா அதிகபட்சமாக 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து ஆட்டத்தின் கடைசி நாளில் 32 ரன்கள் என்ற எளிய இலக்குடன் தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், 10.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்து வென்றது.
யாசிர் ஷா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.