மொகாலி: ஐ.பி.எல். சீசன் 10 போட்டித் தொடரில் இன்று இரண்டு .போட்டிகள் நடக்க உள்ளது.
முதலில் மாலை 4 மணிக்கு பஞ்சாபின் மொகாலியில் நடைபெறும் ஆட்டத்தில் கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதவுள்ளன.
பஞ்சாப் அணியானது 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. இந்த அணி ஏற்கனவே டெல்லியிடம் 51 ரன்னில் தோல்வி அடைந்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் பழி தீர்த்துக் கொள்ளுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
தனது தோல்வி பயணத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க அந்த அணி ஆவலாக காத்திருக்கிறது.
இரண்டாவதாக ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.
நடப்பு சாம்பியனான ஐதராபாத் அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்றுள்ளது. முன்னதாக கொல்கத்தாவிடம் 17 ரன்னில் அந்த அணி ஏற்கனவே தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளும் பலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.