இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. இதில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இதையடுத்து கொழும்புவில் நடந்த 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், 3-ஆவது டெஸ்ட் போட்டி பல்லகெலேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 2-ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை 122 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் எடுத்து இருந்தது.
அப்போது, இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 86 பந்துகளில் சதம் விளாசினார். 96 பந்துகளில் 7 இமாலய சிக்ஸர்களுடன் 8 பவுண்டரிகளை விரட்டி 108 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
சர்வதேச அரங்கில் ஹார்திக் பாண்டியா அடிக்கும் முதல் சதம் இதுவாகும். உள்ளூர் முதல்-தரப் போட்டிகளிலேயே அதிகபட்சமாக 90 ரன்கள் தான் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியில் 8-ஆவது வரிசையில் களமிறங்கிய வீரர் அடித்த அதிவேக சதமாகவும் இது பதிவானது.
மேலும், ஒரே ஓவரில் 26 ரன்களை விளாசித் தள்ளினார். டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஓவரில் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையையும் படைத்தார்.