கண்டி: இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி அவரது காதலி அனுஷ்காவுடன், இலங்கையின் கண்டி பூங்கா ஒன்றில் மரம் நடும் காட்சிகள், இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.
இந்திய கிரிக்கெட் அணிதலைவர் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலித்து வருகிறார்கள். முன்பு விராட் கோலி விளையாடும் சர்வதேச போட்டிகளை அனுஷ்கா ஷர்மா நேரில் கண்டு களித்து வந்தார். ஆனால்கடந்த உலகக்கோப்பையின் பொழுது உண்டான சர்ச்சை காரணமாக அவர் அதனைத் தவிர்த்து வந்தார்.
அத்துடன் பொது இடங்களில் அதிக அளவில் சந்திப்பதும் கிடையாது. ஆனால், சமீப காலமாக விராட் கோலியும், அனுஷ்கா ஷர்மாகவும் இணைந்து உலா வருகின்றனர். கடைசியாக முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு பட சிறப்புக் காட்சியை பார்ப்பதற்கு இருவரும் இணைந்து வந்தார்கள்.
முன்னதாக இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததும், விராட் கோலி விடுமுறையைக் கழிப்பதற்காக நியூயார்க் நகருக்கு சென்றார். அப்போது அனுஷ்கா ஷர்மாவும் உடன் சென்றிருந்தார்.
தற்பொழுது இந்திய அணி இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் முடிந்து இன்று முதல் ஒருநாள் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடர் முடிந்ததும் அனுஷ்கா ஷர்மா இலங்கை சென்றார். அவருடன் விராட் கோலியும் சேர்ந்து பொழுது போக்கி வருகின்றனர்.
அவர்கள் நேற்று அவர்கள் கண்டியில் உள்ள ஒரு பூங்காவிற்கு சென்றனர். அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து மரக்கன்று ஒன்றை நட்டனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்பொழுது இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.