இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையில் தில்லியில் நடந்த 3-ஆவது டெஸ்ட் போட்டியின் போது காற்று மாசு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் ஒவ்வொரு இலங்கை வீரர்களாக மைதானத்தை விட்டு வெளியேற, போட்டியின் போது பதட்டமான சூழ்நிலை உருவானது.
இதன் பின்னர் முகமுடி அணிந்தபடி இலங்கை வீரர்கள் விளையாடினர். இருப்பினும் இந்திய அணி இந்த காற்று மாசு தொடர்பாக எந்த குற்றச்சாட்டினையும் முன்வைக்கவில்லை. மேலும் இந்திய வீரர்களும் இயல்பாகவே விளையாடினர்.
இந்நிலையில், பிப்ரவரியில் நடைபெற உள்ள ஐசிசி கூட்டத்தின் போது இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தொடர் முன்பாகவே திட்டமிடப்பட்டது என்பதால், மருத்துவக்குழுவின் ஆலோசனையையும் கேட்டுள்ளது.
இதனிடையே, இந்த டெஸ்ட் போட்டியின் போது பந்துவீச்சின் போது மட்டுமே இலங்கை வீரர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால், பேட்டிங் செய்யும் போது எந்த முகமுடிகளும் இன்றி விளையாடியது குறிப்பிடத்தக்கது.