குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் கிரிக்கெட் வீரர் பூம்ராவின் தாத்தா சண்டோக் சிங் சடலமாகக் கிடந்துள்ளார்.
84 வயது சண்டோக் சிங், கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரித் பூம்ராவைக் காண்பதற்காக வந்தவர், கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணமல் போனார். இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள வஸ்த்ராபூர் காவல்நிலையத்தில் சண்டோக் சிங் காணமல் போனது குறித்து குடும்ப உறுப்பினர்கள் புகார் அளித்திருந்தார்கள்.
கடந்த டிசம்பர் 1 அன்று வஸ்த்ராபூரில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு சண்டோக் சிங் வந்துள்ளார். பூம்ராவுக்கு டிசம்பர் 5 அன்று பிறந்தநாள். இதனையொட்டி, பேரனைக் காண்பதற்காக வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் அவரால் பூம்ராவைக் காணமுடியவில்லை. டிசம்பர் 8 அன்று, ஜார்க்கண்டில் உள்ள தனது மகன் பல்விந்தர் சிங்க்குத் தொலைப்பேசியில் பேசியுள்ளார். நோய்வாய்ப்பட்டிருக்கும் தனது மனைவியைக் காணச் செல்வதாக அவரிடம் கூறியுள்ளார்.
ஒருகாலத்தில் வெற்றிகரமான தொழிலதிபராக இருந்த சண்டோக் சிங், தனது மகன் (பூம்ராவின் தந்தை) இறந்தபிறகு வியாபாரத்தில் ஆர்வம் செலுத்தாமல் இருந்தார். இதனால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் பிறகு ஆட்டோ ஓட்டுநராகப் பிழைப்பு நடத்தியுள்ளார். பூம்ராவைத் தொலைக்காட்சிகளில் கண்டு அவரை நேரில் காண ஆர்வமாக இருந்துள்ளார்.
இதுபற்றி சண்டோக் சிங்கின் மகள் ரஜிந்தர் கூறியதாவது: தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் பூம்ராவின் தாயை நானும் என் தந்தையும் காணச் சென்றோம். என் தந்தை பூம்ராவைச் சந்திக்க அவர் மறுத்தார். பூம்ராவின் தொலைப்பேசி எண்ணையும் தரமறுத்தார். இதனால் என் தந்தை மனம் உடைந்துபோனார். கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை வெளியே சென்றவர் பிறகு வீடு திரும்பவில்லை என்று கூறுகிறார்.
இந்நிலையில் சபர்மதி ஆற்றில், சண்டோக் சிங் இறந்த நிலையில் கிடந்தார். இந்த மர்மச்சாவின் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள்.