ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் தில்லியை எதிர்கொண்டுள்ள மேற்கு வங்கம், முதல் நாளில் 87 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புணேவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கு வங்கம் முதலில் பேட் செய்து வருகிறது. அதிகபட்சமாக சுதீப் சாட்டர்ஜி 83, ரித்திக் சாட்டர்ஜி 47 ரன்கள் எடுத்தனர். தொடக்க வீரர் அபிஷேக் ராமன் 36, அபிமன்யு ஈஸ்வரன் 4, மனோஜ் திவாரி 30, மஜும்தார் 32, அமித் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கோஸ்வாமி 19, ஆமிர் 4 ரன்களுடன் ஆடி வருகின்றனர். தில்லி தரப்பில் அதிகபட்சமாக சைனி, மனன் சர்மா தலா 2 விக்கெட் எடுத்தனர்.
விதர்பா-185: இதனிடையே, 2-ஆவது அரையிறுதியில் கர்நாடகத்தை எதிர்கொண்டுள்ள விதர்பா தனது முதல் இன்னிங்ஸில் 61.4 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கொல்கத்தாவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த விதர்பாவில், ஆதித்யா சர்வதே அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஃபாஸல் 12, சஞ்சய் 22, ஜாஃபர் 39, சதீஷ் 31, வத்கர் 12, வகாரே 18 ரன்களில் ஆட்டமிழக்க, வான்கடே ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். குர்பானி, உமேஷ் யாதவ் டக் அவுட் ஆகினர். கர்நாடக தரப்பில் மிதுன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய கர்நாடகம் ஞாயிற்றுக்கிழமை முடிவில் 14 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 6, சிதம்பரம் கெளதம் 9 ரன்களுடன் ஆடி வருகின்றனர். முன்னதாக ஆடிய சமர்த் 6, மயங்க் அகர்வால் 15 ரன்களில் வீழ்ந்தனர்.