டெஸ்ட்: மீண்டும் மோசமான பேட்டிங்; தோல்வியின் விளிம்பில் இந்தியா!

இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி தோல்வியைத் தவிர்க்க...
டெஸ்ட்: மீண்டும் மோசமான பேட்டிங்; தோல்வியின் விளிம்பில் இந்தியா!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் சதமடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளதால் இந்திய அணிக்கு 441 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி தோல்வியைத் தவிர்க்கப் போராடிவருகிறது. 

புணேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 94.5 ஓவர்களில் 260 ரன்கள் எடுத்தது. பிறகு ஆடிய இந்திய அணி, 40.1 ஓவர்களில் 105 ரன்களுக்கு சுருண்டது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 155 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. ஸ்டீவன் ஸ்மித் 59, மிட்செல் மார்ஷ் 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்று மார்ஷ் 31 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சிலும் வேட் 20 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தார்கள். ஆஸி. கேப்டன் ஸ்மித், 187 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இது அவருடைய 18-வது டெஸ்ட் சதமாகும். இந்தியாவில் அவர் எடுக்கும் முதல் சதம்.

இதன்பின்னர் 109 ரன்களில் ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஸ்மித். வழக்கம்போல அதிரடியாக ஆடி 3 சிக்ஸர்கள் அடித்த ஸ்டார்க், 30 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். பிறகு லயன் விக்கெட்டை உமேஷ் யாதவும் ஓ’கீஃப் விக்கெட்டை ஜடேஜாவும் வீழ்த்தினார்கள்.

ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 87 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணிக்கு 441 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை மட்டும் இந்திய அணி சாதித்துவிட்டால் அது உலக சாதனையாக இருக்கும். 2003-ல் செயிண்ட் ஜான்ஸ்-ல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதே இன்றுவரை உலக சாதனையாக உள்ளது.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணியின் பேட்டிங் மோசமாகவே உள்ளது. தொடக்க வீரர்களான விஜய் 2 ரன்களிலும் ராகுல் 10 ரன்களிலும் வீழ்ந்தார்கள். இதன்பிறகு இந்திய அணியின் சரிவைத் தடுக்கமுடியாமல் போனது. கோலி (13), ரஹானே (18), அஸ்வின் (8), சாஹா (5) ஆகியோர் தகுந்த இடைவெளிகளில் பெவிலியன் திரும்பினார்கள். இந்த இன்னிங்ஸிலும் ஓ’கீஃப் அற்புதமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணியை நிலைகுலையச் செய்தார். அவருடைய சுழற்பந்துவீச்சுக்கு இந்திய அணியினரால் ஈடுகொடுக்கமுடியாதது எதிர்பாராத திருப்பம் என்றே சொல்லவேண்டும்.

2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 28.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. புஜாரா 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இன்னமும் 4 விக்கெட்டுகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இந்திய அணி இன்னமும் 341 ரன்கள் எடுக்கவேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com