பிரபல மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத்துக்கு தில்லியில் திங்கள்கிழமை திருமணம் நடைபெறவுள்ளது. பெண் வீட்டில் இருந்து ஒரு ரூபாயை மட்டும் அவர் வரதட்சிணையாகப் பெற்றுக் கொண்டார்.கடந்த 2012-ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்ந்தவர் ஹரியாணாவைச் சேர்ந்த யோகேஷ்வர் தத். இவருக்கும், அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ஜெய் பகவான் சர்மாவின் மகள் ஷீத்தலுக்கும் திருமணம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது: சிறுவயதில் இருந்தே எனது குடும்பமும், சொந்தங்களும் பெண்களுக்கு வரதட்சிணை கொடுப்பதற்காக மிகவும் கஷ்டப்படுவதைப் பார்த்துள்ளேன். எனவே, வரதட்சிணை வாங்காமல் திருமணம் செய்ய முடிவெடுத்தேன். எனினும், இரு தரப்பு குடும்பத்தினரும் வரதட்சிணையை ஒரு முக்கிய விஷயமாகக் கருதுவதால் ஒரு ரூபாய் மட்டும் பெற்றுக் கொள்ள முடிவு செய்தேன் என்றார் அவர்.