இந்த ஆண்டு 17 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளதால், நமது நாட்டில் கால்பந்து விளையாட்டு உத்வேகம் பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பிரதமர் மோடியின் அறிக்கை, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் கூறியுள்ளதாவது: 2017-ஆம் ஆண்டில் 17 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை இந்தியா நடத்த இருக்கிறது. இப்போட்டியை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பது மட்டும் நமது முதன்மையான நோக்கமல்ல. இந்தியாவில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டி இருக்க வேண்டும். நமது நாட்டில் உள்ள அனைத்து சிறார், சிறுமியர்களுக்கும் கால்பந்து போட்டி மீது ஈடுபாடு அதிகரிக்க வேண்டும்.
சர்வதேச அளவில் மிகுந்த வரவேற்பையும், அதிக ரசிகர்களையும் கொண்ட கால்பந்து போட்டி, மிகச் சிறந்த விளையாட்டாகும். அந்த விளையாட்டில் 17 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.
இதன் மூலம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 11 கோடி மாணவ, மாணவியருக்கு நாம் கால்பந்து விளையாட்டைக் கற்றுக் கொடுக்க வேண்டும். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இதில் பங்களிக்க வேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகள் கால்பந்து விளையாட ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களது உடல்நலமும் வலுப்படும். நாட்டுக்கும் தலை சிறந்த கால்பந்து வீரர்கள் கிடைப்பார்கள். சர்வதேச அரங்கில் இந்திய கால்பந்து அணியை நிலைநிறுத்தும் தகுதியும், திறமையும் நமது குழந்தைகளுக்கு உண்டு. இதனை நான் முழுமையாக நம்புகிறேன் என்று மோடி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.