மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், அஜய் ஜெயராம் ஆகியோர் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், தரவரிசையில் முன்னணியில் உள்ள இந்தியாவின் சாய்னா நெவால், தாய்லாந்தின் சாசினி கோர்பாப்பை எதிர்கொண்டார். இதில், 21-9, 21-8 என்ற செட் கணக்கில் சாய்னா, வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல் ஆடவர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்திலுள்ள இந்திய வீரர் அஜய் ஜெயராம், தனது 2-ஆவது ஆட்டத்தில் 21-10, 17-21, 21-14 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஜூன் ஹா லியாங்கை வீழ்த்தினார். அஜய் ஜெயராம், தனது அடுத்த ஆட்டத்தில் சீன தைபேயின் ஷு சுவானை எதிர்கொள்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஹேமந்த் எம். கௌடா 5-21, 19-21 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சூன்-வெயிடம் வெற்றியை இழந்தார். கலப்பு இரட்டையர் பிரிவில் புதிதாக கைகோத்த இந்தியாவின் மனு அத்ரி - ஜூவாலா கட்டா இணை, இந்தோனேஷியாவின் லூஹி அப்ரி நுக்ரோஹோ - ரிரின் எமிலா இணையை 21-19, 21-18 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது. மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான அபர்ணா பாலன் - பிரஜகதா சாவந்த் 21-10, 21-11 என்ற செட் கணக்கில் இந்தோனேஷிய ஜோடியான அஹிஸ்னா ஃபத்குல் - அப்ரில்சசி புத்ரியை வெற்றி கொண்டது. பிரஜகதா சாவந்த் கலப்பு இரட்டையர் பிரிவிலும் தனது ஜோடியான யோகேந்திரன் கிருஷ்ணனுடன் இணைந்து வெற்றி பெற்றார்.