மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் இன்று மோதுகின்றன.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் உலக சாதனை படைப்பாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 191 போட்டிகளில் 5992 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் 181 போட்டிகளில் 5959 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். எனவே இந்தப் போட்டியில் 34 ரன்கள் எடுத்தால் மிதாலி, அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துவிடுவார்.
மேலும் 41 ரன்கள் எடுத்தால் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆறாயிரம் ரன்களைத் தொட்ட முதல் வீராங்கனை என்கிற உலக சாதனையையும் புரிவார். இதனால் இன்றைய போட்டியை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.
எட்வர்ட்ஸ் இப்போது கிரிக்கெட் விளையாடுவதில்லை. அதேபோல மூன்றாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் கிளார்க்கும் 4884 ரன்களுடன் 2005-ல் ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது விளையாடுகிற வீராங்கனைகளில் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த டெய்லர் 3817 ரன்கள் எடுத்துள்ளார். எனவே மிதாலி ராஜின் சாதனையை இன்னொருவர் முறியடிக்க பல வருடங்களாகும்.