தென் ஆப்பிரிக்கா 340 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: இங்கிலாந்துக்கு பதிலடி
இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 340 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி கண்டது. இதன்மூலம் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது.
நாட்டிங்காமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 96.2 ஓவர்களில் 335 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ஆம்லா 78, டி காக் 68 , பிலாண்டர் 54 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 51.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் கேப்டன் ஜோ ரூட் 78 ரன்கள் சேர்த்தபோதும், எஞ்சிய வீரர்கள் ஏமாற்றினர். தென் ஆப்பிரிக்கத் தரப்பில் கேசவ் மகாராஜ், கிறிஸ் மோரீஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 130 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 104 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் ஆம்லா 87, டீன் எல்கர் 80, கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 63, பிலாண்டர் 42 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து 474 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 4-ஆவது நாளான திங்கள்கிழமை 44.2 ஓவர்களில் 133 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக அலாஸ்டர் குக் 42 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கத் தரப்பில் வெர்னான் பிலாண்டர், கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.