இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 ஆகிய போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ஆம் தேதி காலேவிலும், 2-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கொழும்பிலும், 3-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கண்டியிலும் தொடங்குகிறது.
ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தோற்றதைத் தொடர்ந்து இலங்கை கேப்டன் ஏஞ்செலோ மேத்யூஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இலங்கை டெஸ்ட் கேப்டனாக தினேஷ் சன்டிமலும், ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டியின் கேப்டனாக உபுல் தரங்காவும் நியமிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சன்டிமல் விளையாடமாட்டார் என்று அறியப்படுகிறது.
அதிகாரபூர்வமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து சன்டிமல் விலகியுள்ளார். இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டிக்கு ரங்கனா ஹெராத் கேப்டனாகச் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.