திருமலையில் ஏழுமலையானின் படத்தை தன்னிடம் அளிக்க வந்த ரசிகரை, சச்சின் டெண்டுல்கர் கௌரவித்து, அவரிடமிருந்து படத்தை அன்புடன் பெற்றுக் கொண்டார்.
திருப்பதி ஏழுமலையானை வியாழக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய டெண்டுல்கருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்க நாயகர் மண்டபத்தில் ஏழுமலையானின் சிறப்புப் பிரசாதங்களை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து, கோயிலை விட்டு அவர் வெளியே வந்தார். அப்போது, டெண்டுல்கரை காண அங்கு, ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். அதனால் கோயில் முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஒரு ரசிகர் சச்சினிடம் ஏழுமலையானின் படத்தை அளிக்க முன்வந்தார். ஆனால் பாதுகாப்பில் இருந்த போலீஸார் அவரை விரட்டினர். இதனைக் கண்ட சச்சின் அந்த ரசிகரை அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர் மூலம் வரவழைத்து, அவர் கொடுக்க வந்த ஏழுமலையான் படத்தை பெற்றுக் கொண்டு, அவரிடம் அன்புடன் பேசி அனுப்பி வைத்தார். அங்கு கூடியிருந்த ரசிகர்கள், போலீஸார், தேவஸ்தான அதிகாரிகள் இதனை கண்டு வியந்தனர்.