மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அதில் டெர்பியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இதில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கெளர் 115 பந்துகளில் 7 சிக்ஸர், 20 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் குவித்தார்.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் அபார வெற்றி கண்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் ரூ. 50 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர்களுக்குத் தலா ரூ. 25 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
லார்ட்ஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன.