முதல் நாளில் இந்தியா 399 ரன்கள் குவிப்பு: தவன் 190, புஜாரா 144* 

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாளன்று இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்துள்ளது.
முதல் நாளில் இந்தியா 399 ரன்கள் குவிப்பு: தவன் 190, புஜாரா 144* 

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாளன்று இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்துள்ளது. ஷிகர் தவன் அதிரடியாக விளையாடி 190 ரன்களும் புஜாரா ஆட்டமிழக்காமல் 144 ரன்களும் எடுத்து இந்திய அணிக்கு வலுவான நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், இலங்கையின் காலே நகரில் இன்று தொடங்கியுள்ளது. இதே காலே மைதானத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையுடனான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் 176 ரன்கள் என்ற இலக்கை எட்டும் முயற்சியில், 112 ரன்களில் வீழ்ந்து மோசமான தோல்வியைத் தழுவியது இந்தியா. அதற்கு பதிலடி தரும் வகையில் இந்த ஆட்டத்தில் இந்தியா விளையாடும் என்று எதிர்பார்க்கலாம். 2015-ஆம் ஆண்டு தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெறவில்லை. ஹார்தி பாண்டியா அறிமுகமாகியுள்ளார். சமி, உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் வேகப்பந்துவீச்சாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு இது 50-வது டெஸ்ட் போட்டியாகும். இதேபோல இலங்கை அணியில் குணதிலகா அறிமுகமாகியுள்ளார்.

தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய தவனும் முகுந்தும் கவனமாக விளையாடினார்கள். இரண்டு பவுண்டரிகள் அடித்த முகுந்த், பிரதீப்பின் பந்துவீச்சில் 12 ரன்களில் வெளியேறினார். அடுத்த டெஸ்ட் போட்டியில் ராகுல் விளையாடும் வாய்ப்புள்ளதால் இந்த டெஸ்டில் தன்னை நிரூபித்தால் மட்டுமே அடுத்த டெஸ்டில் முகுந்தால் விளையாடமுடியும். எனவே இரண்டாவது இன்னிங்ஸில் அவர் திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகுந்த் வெளியேறியபிறகு கூட்டணி சேர்ந்த தவன் - புஜாரா ஆகிய இருவரும் பொறுப்புடன் விளையாடினார்கள். வழக்கத்தை விடவும் இன்று வேகமாக ரன்கள் குவித்தார் தவன். இதனால் 62 பந்துகளில் அரை சதம் எடுத்தார் தவன். இந்திய அணி 24.4 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்தது. மறுபக்கம் புஜாரா தவனுக்கு நல்ல இணையாக விளங்கினார். அவரும் ரன்கள் குவிப்பதில் ஆர்வம் செலுத்தினார்.

முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 27 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. தவன் 64, புஜாரா 37 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இதன்பிறகு சிறப்பாக விளையாடிய தவன், 110 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்பிறகு, தவனின் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 190 ரன்களில் அவர் ஆட்டமிழக்கும் வரை உணவு இடைவேளைக்கும் தேநீர் இடைவேளைக்கும் இடையே  அவர் மட்டும் 126 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்தப் பகுதியில் எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனும் இவ்வளவு ரன்கள் எடுத்ததில்லை. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக உம்ரிகர் 111 ரன்கள் எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அதை தவன் முறியடித்தார். அதேசமயம் ஒரு செசனில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர், சேவாக். இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அவர் 133 ரன்கள் எடுத்தார். ஆனால் அது ஒருநாளின் 3-வது பகுதியில் எடுத்த ரன்களாகும். அடுத்த இடத்தில் 126 ரன்களுடன் உள்ளார் தவன். 

உணவு இடைவேளைக்குப் பிறகு தவனின் அதிரடியான ஆட்டத்தில் இந்திய அணி 41 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்தது. புஜாரா 80 ரன்களில் 50 ரன்கள் எடுத்தார். தவன் - புஜாரா கூட்டணி 200 ரன்களைக் கடந்தபோது 147 பந்துகளில் 150 ரன்களைப் பூர்த்தி செய்தார் தவன். இதன்பிறகு தவனின் அதிரடி ஆட்டம் தொடர்ந்தது. பவுண்டரிகளாக விளாசினார். முதல் டெஸ்டில் ஆஸ்திரேயாவுக்கு எதிராக 187 ரன்களைக் குவித்ததை இன்று ஞாபகப்படுத்தினார் தவன். இதனால் அவருடைய இரட்டைச் சதத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் பவுண்டரி அடிக்கும் வேகத்தில் கேட்ச் கொடுத்து 190 ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார் தவன். 168 பந்துகளில் 31 பவுண்டரிகள் விளாசி இந்தியாவுக்கு அமர்க்களமான தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.

முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது. புஜாரா 75 ரன்களுடனும் கோலி 1 ரன்னுடனும் களத்தில் இருந்தார்கள்.

பிறகு கோலி 3 ரன்களில் பிரதீப்பின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் நடுவர் அவுட் கொடுக்கவில்லை. டிஆர்எஸ் முறையில் வெளியேறினார் கோலி.

இதன்பிறகு ஜோடி சேர்ந்த புஜாரா - ரஹானா ஆகிய இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். வழக்கமாக இல்லாமல் இன்று சற்று வேகமாக ரன்கள் குவித்த புஜாராவும் தவன் அவுட் ஆனபிறகு பொறுமையாக விளையாடினார். பிறகு 173 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் சதத்தைப் பூர்த்தி செய்தார். டெஸ்ட் போட்டிகளில் இது புஜாராவின் 12-வது சதமாகும். 

இலங்கை அணியினர் எவ்வளவு முயன்றும் புஜாரா - ரஹானே கூட்டணியைப் பிரிக்கமுடியவில்லை. இருவரும் மிகவும் கவனமாக விளையாடி 182 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தார்கள். இன்றைய நாளின் முதலிரண்டு பகுதிகளில் கிடைத்த பெரிய ஸ்கோரைத் தொடர்ந்து நிலைநிறுத்தினார்கள். இதனால் முதல் நாளில் இந்திய அணி 399 ரன்கள் என்கிற வலுவான ஸ்கோரை எட்டியது.

முதல் நாள் முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்துள்ளது. புஜாரா 144, ரஹானே 39 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com