நெருக்கடியில் ஆஸ்திரேலிய அணி! கடைசி லீக் போட்டியில் வெற்றியடைய வேண்டிய கட்டாயம்!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்குக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நெருக்கடியில் ஆஸ்திரேலிய அணி! கடைசி லீக் போட்டியில் வெற்றியடைய வேண்டிய கட்டாயம்!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்குக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த அணி ஆடிய இரு ஆட்டங்களும் மழையால் கைவிடப்பட்டதால் கடைசி லீக் போட்டியில் வெற்றியடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

லண்டனில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியா - வங்கதேசம் இடையேயான ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

ஆனால் அந்த அணி 44.3 ஓவர்களில் 182 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியில் தொடக்க வீரர் தமிம் இக்பால் 95 ரன்கள் குவித்தபோதும், எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியது ஏமாற்றமாக அமைந்தது. இதன்பின்னர் ஆஸ்திரேலிய அணி, 16 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. வார்னர் 40, ஸ்மித் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

தொடர்ந்து மழை பெய்ததாலும் கட்டாயத் தேவையான 20 ஓவர்களுக்கு ஆட்டம் நடைபெறாததாலும் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி ஆட்டம் கைவிடப்பட்டது. கடைசியில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தன.

ஏற்கெனவே நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியும் மழையால் தடைபட்டது. இதனால் இரு போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி கைவசம் இரு புள்ளிகள் மட்டுமே வைத்துள்ளது. 

கடைசி லீக் போட்டியில் பலம் பொருந்திய இங்கிலாந்துடன் ஆஸ்திரேலியா மோதுகிறது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும் ஆஸ்திரேலியா. தோற்றுப்போனால் வாய்ப்பில்லை. வங்கதேசம் - நியூஸிலாந்து இடையேயான போட்டியில் வெற்றி பெறுகிற அணி இங்கிலாந்துடன் இணைந்து அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com