நார்வே செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியனுடன் டிரா செய்தார்.
நார்வேயின் ஸ்டவாங்கர் நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 8-ஆவது சுற்றில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ரஷியாவின் செர்ஜி கர்ஜாகினை தோற்கடித்தார். அதேநேரத்தில் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக், பிரான்ஸின் மேக்ஸைம் வச்சியரிடம் தோற்றார். அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா, சகநாட்டவரான வெஸ்லோ சோவுடன் டிரா செய்தார். இதேபோல் அமெரிக்காவின் ஃபாபியோனா கருணா-நெதர்லாந்தின் அனிஷ் கிரி இடையிலான ஆட்டமும் டிராவில் முடிந்தது. இன்னும் ஒரு சுற்று மட்டுமே மீதமுள்ளது. தற்போதைய நிலையில் லெவோன் ஆரோனியன் 5.5 புள்ளிகளுடன் தனி முன்னிலை பெற்றுள்ளார். ஹிகாரு நாகமுரா 5 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், நெதர்லாந்தின் அனிஷ் கிரி 4.5 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.
அமெரிக்காவின் வெஸ்லே சோ, ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும், ஆனந்த், கருணா, மேக்ஸைம் வச்சியர், கார்ல்சன் ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்திலும் உள்ளனர். செர்ஜி கர்ஜாகின் 3 புள்ளிகளுடன் கடைசி (10-ஆவது) இடத்தில் உள்ளார்.