இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இயக்குநரான ரவி சாஸ்திரி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ரவி சாஸ்திரி மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார். விரைவில் அவர் விண்ணப்பிப்பார்' என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜூலை 9}ஆம் தேதி வரையில் பிசிசிஐ நீட்டித்துள்ளது.
ரவி சாஸ்திரி விண்ணப்பிக்கும் பட்சத்தில், 2019 உலகக் கோப்பை போட்டி வரையில் 2 ஆண்டுகளுக்கு பயிற்சியாளர் பொறுப்பில் நீடிப்பதற்கு அவர் உறுதியளிக்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், அவர் தனக்கான உதவிப் பணியாளர்கள், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோரையும் உறுதி செய்ய வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.
இந்திய அணியின் இயக்குநராக 2014 ஆகஸ்ட் முதல் 2016 ஜூன் வரையில் ரவி சாஸ்திரி பொறுப்பு வகித்தார். அவரை அடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோலி-ரவி சாஸ்திரி இடையே இணக்கமான நிலை இருந்ததன் காரணமாக, பயிற்சியாளர் தேர்வில் ரவி சாஸ்திரிக்கே கோலி முன்னுரிமை அளிப்பார் என்று கூறப்படுகிறது.