பயிற்சியாளர் பதவி: வெங்கடேஷ் பிரசாத் விண்ணப்பம்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் விண்ணப்பித்துள்ளார்...
பயிற்சியாளர் பதவி: வெங்கடேஷ் பிரசாத் விண்ணப்பம்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜிநாமா செய்தார். இதையடுத்து அந்தப் பதவிக்கு முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் விண்ணப்பித்துள்ளார். 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க அனில் கும்ப்ளேவுக்கு பிசிசிஐ அனுமதி அளித்தபோதும், அதை ஏற்க மறுத்து கும்ப்ளே ராஜிநாமா செய்தார். கோலியுடனான கருத்துவேறுபாடுகளால் இந்த முடிவை எடுத்ததாக கும்ப்ளே கூறினார்.

இந்திய அணிக்கான அடுத்தத் தலைமைப் பயிற்சியாளரை நியமிக்கும் விவகாரத்தில் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து பிசிசிஐ செயல்படவுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் பங்கேற்கச் சென்றுள்ள இந்திய அணியின் கண்காணிப்பாளராக கிரிக்கெட் நடவடிக்கைகள் மேலாளர் எம்.வி.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். 

கும்ப்ளேவின் ஓராண்டுப் பதவிக்காலம் சாம்பியன்ஸ் டிராபியுடன் முடிவுக்கு வந்தபோதிலும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் இந்திய அணியுடன் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்லவில்லை. கேப்டன் விராட் கோலியுடனான கருத்து வேறுபாடு காரணமாக ராஜிநாமா செய்துள்ளார் கும்ப்ளே. அவருடைய பயிற்சியின் கீழ் கடந்த 12 மாதங்களாக மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களை இந்தியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றது. நடப்புப் பயிற்சியாளர் என்கிற முறையில் பயிற்சியாளர் தேர்வுக்கு கும்ப்ளே நேரடியாகத் தகுதி பெற்ற நிலையில், அந்தப் பதவிக்கு டாம் மூடி, ரிச்சர்டு பைபஸ், லால்சந்த் ராஜ்புத், சேவாக் உள்ளிட்டோரும் விண்ணப்பித்துள்ளனர். 

தற்போது கும்ப்ளேவின் விலகலையடுத்து பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜூலை 9ம் தேதி வரையில் பிசிசிஐ நீட்டித்துள்ளது. 

ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். தற்போது புதிய தகவலாக முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத்தும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். 

பிரசாத், 33 டெஸ்டுகள், 162 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 3 வருடங்களாக இந்திய ஜூனியர் அணியின் தேர்வுக்குழுவின் தலைவராக உள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இரு வருடங்கள் பணியாற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com