புதுதில்லி: ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற போது அறிவித்த பரிசுத்தொகையினை ஹரியானா அரசு இன்னும் வழங்கவில்லை என மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வேதனை தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. இந்த போட்டிகளில் இந்தியாவின் பதக்க கனவை தீர்க்கும் வகையில் வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
அவரின் இந்த சாதனைக்கு பரிசாக ஹரியானா மாநில அரசு சாக்ஷி மாலிக்குக்கு ரூ.2½ கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தது. அத்துடன் அவருக்கு அரசு வேலை மற்றும் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால் அறிவித்தபடி பரிசுத்த தொகையினை ஹரியானா மாநில அரசு அவருக்கு வழங்கவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. சாக்ஷி மாலிக் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள தகவலில் “ஒலிம்பிக் பதக்கம் வெல்வேன் என்ற எனது வாக்குறுதியை நான் காப்பாற்றி விட்டேன்; ஹரியானா அரசு எப்போது அறிவித்ததை வழங்கும்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் அவர் “எனது ஒலிம்பிக் பதக்க வெற்றிக்குப் பிறகு ஹரியானா அரசு அறிவித்த பரிசுகள் அனைத்தும் ஊடகங்களுக்கான வெற்று விளம்பரங்கள் மட்டும்தானா?” என்றும் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.