இந்திய கேப்டன் விராட் கோலி வலது தோள்பட்டை காயம் காரணமாக வியாழக்கிழமை வலைப் பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் அவர் நாளை தொடங்கவுள்ள கடைசி டெஸ்டில் பங்குபெறுவது தொடர்ந்து சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது.
ராஞ்சியில் நடைபெற்ற 3-ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸின்போது பவுண்டரியைத் தடுக்க முயன்ற கோலிக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஞ்சி டெஸ்டிலேயே அவர் களம் இறங்கினார். எனினும், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில், 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் சனிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியினர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதற்காக சக அணியினருடன் மைதானத்துக்கு வந்த கோலி ஒரு சில உடற்பயிற்சிகளை மட்டும் மேற்கொண்டார். ஆனால், வலைப் பயிற்சியில் ஈடுபடவில்லை. மாற்று வீரர் ஷ்ரேயாஸ்: இதனிடையே, கோலி ஆட முடியாமல் போகும் சூழ்நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.
காயம் குறித்து கோலி கூறியதாவது: நான் 100% உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன். இன்னொரு பரிசோதனைக்குப் பிறகு என்னுடைய நிலையைத் தெளிவுபடுத்துவேன். இன்றிரவு அல்லது நாளை காலை நான் ஆடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.