மத்திய அரசின் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் மானியம் பெறுவதற்கும், ரேஷன் கடைகளில் பொருள்கள் பெறுவதற்கும் ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வரப்படுகிறது. வங்கிக் கணக்கு தொடங்குதல், புதிதாக பான் அட்டை பெற, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய எனப் பல்வேறு பணிகளுக்கு ஆதார் எண் தேவைப்படுகிறது.
இந்நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், தன்னுடைய ட்விட்டர் தளத்தில் தோனி ஆதாருக்காக விண்ணப்பிக்கும் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். ஆதார் அட்டைப் பணிகளை மேற்கொள்ளும் சிஎஸ்சி என்கிற நிறுவனத்தின் ட்விட்டர் தளம் ஒன்றில் அதே புகைப்படம் மற்றும் தோனியின் ஆதார் அட்டை விண்ணப்பமும் வெளியானது. இதைக் கண்ட தோனியின் மனைவி சாக்ஷி அதிர்ச்சி அடைந்தார். தோனியின் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படையாகப் பகிர்ந்ததில் அவர் கடுப்பாகி, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திடம் ட்விட்டர் தளத்திலேயே கேள்விகளை எழுப்பினார்.
இதில் ஏதாவது அந்தரங்கப் பாதுகாப்பு உள்ளதா? ஆதார் அட்டை குறித்த தகவல்களும் ஆதார் விண்ணப்பமும் பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளன என்று சட்ட அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
உடனே சட்ட அமைச்சரும், இல்லை. அத்தகவல்கள் பொதுவுக்கு உரித்தானது அல்ல. இந்த ட்வீட்டில் ஏதாவது தனிப்பட்ட தகவல்கள் வெளியானதா என்று சாக்ஷியிடம் ஒரு கேள்வி எழுப்பினார்.
பதிலுக்கு சாக்ஷி, தோனியின் ஆதார் அட்டைக்கான விண்ணப்பத்தில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் ட்விட்டரில் கசிந்துள்ளன என்றார். அதற்கு ஆதாரமாக ட்விட்டர் தளத்தில் வெளியான தோனியின் ஆதார் விண்ணப்பம் குறித்த புகைப்படத்தையும் வெளியிட்டார்.
உடனே சட்ட அமைச்சர், இதை என் கவனத்துக்குக் கொண்டுவந்ததற்கு நன்றி. தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவது சட்ட விரோதம். இச்சம்பவம் தொடர்பாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாக்ஷிக்கு உறுதியளித்தார். அமைச்சரின் உடனடி பதில்களுக்கும் நடவடிக்கைக்கும் சாக்ஷி நன்றி தெரிவித்தார்.