இந்த ஐபிஎல் போட்டியில் பிளேஆஃப்-புக்குச் செல்லக்கூடிய அணிகள் குறித்த ஒரு முடிவை எடுப்பது எளிதாக உள்ளது. முக்கியமாக, முதல் மூன்று அணிகள்.
கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு பிளேஆஃப்-பில் இருக்கை கிடைத்தாயிற்று. மிச்சமுள்ள ஒரே ஒரு இடத்துக்குத்தான் மீதமுள்ள லீக் ஆட்டங்கள் அடுத்த இரு வாரங்களுக்கு நடக்கவுள்ளன.
14 புள்ளிகள் உடைய கொல்கத்தா, மும்பை ஆகிய அணிகளுக்கு இன்னும் ஒரு வெற்றி கிடைத்தால் போதும் பிளேஆஃப் உறுதி. கொல்கத்தாவுக்கு இன்னும் 4 ஆட்டங்களும் மும்பைக்கு 5 ஆட்டங்களும் மீதமுள்ளன. எனவே இந்த இரு அணிகளும் பிளேஆஃப் செல்லாது என்று எண்ணவே வேண்டியதில்லை.
அடுத்ததாக 10 ஆட்டங்களில் 13 புள்ளிகள் கொண்ட ஹைதராபாத்தும் பிளேஆஃப்-பைக் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. மீதமுள்ள 4 ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றால் பிளேஆஃப் உறுதி. இல்லை ஒரு வெற்றி கூட அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்திவிடும். எனவே ஹைதராபாத்தைச் சந்தேகம் கொள்ளவேண்டியதில்லை.
அணிகள் | போட்டி | வெற்றி | தோல்வி | முடிவு இல்லை | புள்ளிகள் |
கொல்கத்தா | 10 | 7 | 3 | - | 14 |
மும்பை | 9 | 7 | 2 | - | 14 |
ஹைதராபாத் | 10 | 6 | 3 | 1 | 13 |
புணே | 9 | 5 | 4 | - | 10 |
பஞ்சாப் | 9 | 4 | 5 | - | 8 |
குஜராத் | 9 | 3 | 6 | - | 6 |
பெங்களூர் | 10 | 2 | 7 | 1 | 5 |
டெல்லி | 8 | 2 | 6 | - | 4 |
4-வது இடம் யாருக்கு? இதற்கு இரு அணிகள் இப்போதைக்குப் போட்டியிடுகின்றன என்று சொல்லலாம். மற்ற அணிகள் இது எட்டாக்கனி. எல்லா ஆட்டங்களிலும் ஜெயித்தால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலை.
எனவே தற்போதைக்கு 4-ம் இடத்தைப் பிடிக்க இரு அணிகளுக்கிடையே கடும் போட்டி.
முதல் வாய்ப்பு புணே அணிக்குக் கிட்டலாம். 9 ஆட்டங்களில் 10 புள்ளிகள் வைத்திருக்கும் புணே, மீதமுள்ள 5 ஆட்டங்களில் மூன்று ஆட்டங்களில் வென்றால் பிளேஆஃப் உறுதி.
அதேபோல 9 ஆட்டங்களில் 8 புள்ளிகள் வைத்திருக்கும் பஞ்சாப், மீதமுள்ள 5 ஆட்டங்களில் 4 ஆட்டங்களை வென்றால் பிளேஆஃப் பக்கம் செல்லலாம். எனவே இந்த இரு அணிகளில் புணே அணிக்கே வாய்ப்பு அதிகம் எனலாம்.
குஜராத் அணி, மீதமுள்ள 5 ஆட்டங்களில் ஐந்தையும் வென்றாகவேண்டும். அதேபோல டெல்லி அணி மீதமுள்ள 6 ஆட்டங்கள் அனைத்தையும் வென்றால் மட்டுமே 16 புள்ளிகள் கிடைத்து அடுத்தச் சுற்றுக்குச் செல்லமுடியும். பெங்களூர் அணிக்குச் சுத்தமாக வாய்ப்பில்லை. மீதமுள்ள 4 ஆட்டங்களையும் வென்றாலும் அந்த அணிக்கு 13 புள்ளிகள்தான் கிடைக்கும். 13 புள்ளிகளுடன் ஐபிஎல்-லில் எந்த அணியும் பிளேஆஃப்-புக்குச் சென்றதில்லை. கடைசியில் 14 புள்ளிகள் இருந்தாலே அடுத்தச் சுற்று என்கிற நிலைமைகூட உருவாகலாம். அதற்கு நிறைய அதிர்ச்சிகள் ஏற்படவேண்டும். பார்க்கலாம். அந்தளவுக்கு ஐபிஎல் செல்லுமா என.
லீக் சுற்றின் கடைசி தினமான மே 14 அன்று நடைபெறவுள்ள மாலை 4 மணி ஆட்டத்தில் புணேவும் பஞ்சாப்பும் மோதுகின்றன. அந்த ஒரு ஆட்டத்துக்கு பிளேஆஃப் செல்லக்கூடிய 4-வது அணியை நிர்ணயிக்கும் வாய்ப்பு அதிகம்.