உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய ஆடவர் (காம்பவுன்ட்) அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் அபிஷேக் வர்மா, சின்ன ராஜூ ஸ்ரீதர், அமான்ஜீத் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தனது அரையிறுதியில் 232-230 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்தது. சனிக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் கொலம்பியாவை சந்திக்கிறது இந்திய அணி.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா-ஜோதி சுரேகா ஜோடி தங்களின் அரையிறுதியில் 152-158 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரிய ஜோடியிடம் தோல்வி கண்டது. அபிஷேக் வர்மா-ஜோதி சுரேகா ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான பிளே ஆஃப் சுற்றில் அமெரிக்காவுடன் மோதுகிறது.
ஆடவர் ஒற்றையர் ரீகர்வ் காலிறுதியில் இந்தியாவின் அதானு தாஸ், நெதர்லாந்தின் ஸ்டீவ் விஜ்லரிடம் தோல்வி கண்டார். மகளிர் ஒற்றையர் ரீகர்வ் காலிறுதியில் இந்தியாவின் தீபிகா 1-7 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானின் ஹயகவா ரென்னிடம் தோல்வி கண்டார்.
ரீகர்வ் கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் அதானு தாஸ்-தீபிகா ஜோடி 3-5 என்ற புள்ளிகள் கணக்கில் ரஷிய ஜோடியிடம் தோல்வி கண்டது. இந்திய ஆடவர் ரீகர்வ் அணி தனது காலிறுதியில் 0-3 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானிடம் தோல்வி கண்டது. இந்திய மகளிர் ரீகர்வ் அணி தனது முதல் சுற்றில் 2-6 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.