மாநில கிரிக்கெட் சங்கங்களில் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் அவர்களின் பணிக் காலம் தொடர்பான தகவல்களை தருமாறு சம்பந்தப்பட்ட பல்வேறு சங்கங்களையும் பிசிசிஐயின் நிர்வாகக் குழு (சிஓஏ) கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக, இதேபோன்ற பட்டியலை ஏற்கெனவே ஒருமுறை சிஓஏ கேட்டிருந்தது. அப்போது, அந்த விவகாரம் தொடர்பான லோதா குழு பரிந்துரைகள் தெளிவானதாக இல்லை என மாநில சங்கங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் சிஓஏ வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களின் அதிகாரிகளுடன் கடந்த 6-ஆம் தேதி நடத்த கூட்டத்தின்போது, சங்கங்களில் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளின் பட்டியல் கிடைத்தால் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, உங்களது சங்கத்தில் (சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கங்கள்) பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் அவர்கள் பணிக் காலம் குறித்த பட்டியலை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன், லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக மாநில கிரிக்கெட் சங்கங்களுடன் மீண்டும் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.