பாகிஸ்தானுடனான இரு தரப்பு கிரிக்கெட் தொடர் குறித்து மத்திய அரசுக்கு 15 நாள்களுக்கு முன்பு நினைவுபடுத்தியதாக பிசிசிஐ வியாழக்கிழமை கூறியது.
இதுகுறித்து, பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளதரி கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடர் குறித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம்.
இந்நிலையில், அதுகுறித்து கடந்த 15 நாள்களுக்கு முன்பு அரசுக்கு நினைவுபடுத்தியுள்ளோம். இதுவரை எந்த பதிலும் அரசிடம் இருந்து கிடைக்கவில்லை. பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் விளையாடுவது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் குறித்து இருதரப்பு கிரிக்கெட் வாரியமும் இந்த மாத இறுதியில் துபையில் கூடி கலந்தாலோசிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.