இந்திய டெஸ்ட் கிரிக்கெட் முன்னாள் வீரர் ஏ.ஜி.மில்கா சிங் (75) மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வெள்ளிக்கிழமை காலமானார்.
கடந்த 1960-களில் இந்திய அணிக்காக 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மில்கா சிங் விளையாடியுள்ளார். இடது கை பேட்ஸ்மேனும், சிறந்த ஃபீல்டருமான மில்கா சிங் தனது 17 வயதில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக களம் கண்டார். அப்போதைய மதராஸ் மாகாணத்துக்காக (தற்போது தமிழ்நாடு) ரஞ்சி விளையாடிய மில்கா, தனது 18-ஆவது வயதில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
முதல் தர கிரிக்கெட்டில் 8 சதங்கள் உள்பட, 4,000 ரன்களை அவர் எட்டியுள்ளார். பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றிய மில்கா சிங், தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.
மில்கா சிங்கின் மூத்த சகோதரரான கிருபால் சிங்கும் கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் இந்திய அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த சகோதரர்கள் இருவரும் 1961-62 காலகட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக இணைந்து விளையாடியுள்ளனர். மில்கா சிங்கின் மறைவுக்கு பிசிசிஐ இரங்கல் தெரிவித்துள்ளது.