இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணியின் சர்ச்சைக்குரிய சுழல்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளாராகத் திகழ்ந்தவர் சயீத் அஜ்மல். அந்த அணிக்காக 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 78 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அத்துடன் 113 ஒருநாள் போட்டிகளில் 184 விக்கெட்டுகளையும், 64 டி20 போட்டிகளில் 85 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.
தன்னுடைய உச்சபட்சமான ஆட்டத்திறனில் விளையாடிய பொழுது அஜ்மல் உலக அரங்கில் முன்னணி சுழல் பந்து வீச்சாளராகத் திகழ்ந்தார். ஆனாலும் அஜ்மலின் பந்துவீச்சு கிரிக்கெட் விதிகளுக்கு மாறாக 'எறிவது' போன்று இருப்பதாக எழுந்த குற்றசாட்டுகளின் காரணமாக சர்ச்சையில் சிக்கினார்.
இதன் காரணமாக மருத்துவப் பரிசோதனைகளுக்கு பிறகு அவர் தனது பந்துவீச்சு முறையினை மாற்றிக் கொண்டு மீண்டும் களமிறங்கினார்.ஆனாலும் முன்பு போல் அவரால் பிரகாசிக்க இயலவில்லை. போட்டிகளில் விக்கெட்டுகளை கைப்பற்ற மிகவும் போராடினார். பின்னர் அவர் தேசிய அணிக்கு தேர்வும் செய்யப்படவில்லை.
தற்பொழுது 40 வயதான அஜ்மல் பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் தேசிய 20 ஓவர் போட்டித் தொடருடன் ஓய்வு பெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஓய்வு அறிவிப்பு குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் , 'தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தான் நிர்ணயித்து இருந்த இலக்குகளை எட்டிவிட்டதாகவும், திருப்தியுடன் இந்த பயணத்தை முடித்துக்கொள்வதாகவும்' தெரிவித்துள்ளார்.