8 மணிக்குத் தொடங்கும் ஐபிஎல் ஆட்டங்களில் மாற்றம் கொண்டுவர ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுவரை இரவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் இரவு 8 மணிக்குத் தொடங்கின. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் கூட்டத்தில் ஆட்ட நேரங்களில் மாற்றம் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா இதுகுறித்து ஒரு பேட்டியில் கூறியதாவது: இரவு 8 மணிக்குத் தொடங்கும் போட்டியை அடுத்த வருடம் முதல் இரவு 7 மணிக்கே தொடங்குவது குறித்து விவாதித்துள்ளோம். கூட்டத்தில் இதை அனைவரும் வரவேற்றார்கள். ஆனால் இதற்கு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனம் ஒப்புக்கொள்ளவேண்டும். பல கிரிக்கெட் மையங்களில் தொலைதூரம் பயணம் செய்யவேண்டியுள்ளது. இதுகுறித்து எல்லாம் விவாதித்தோம். இதையடுத்து ஐபிஎல் போட்டிகளை முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என எண்ணினோம் என்று கூறியுள்ளார்.
கடந்த வருட ஐபிஎல் போட்டியின்போது கொல்கத்தா மற்றும் ஹைதரபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி இரவு 1.45 மணிக்கு முடிந்தது. அப்போதே, ஐபிஎல் போட்டிகளைச் சற்று முன்னதாக ஆரம்பிக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.
ஐபிஎல்-ன் இந்த முடிவு வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் சாதகமாக இருந்தாலும் ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் இதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அமல்படுத்தமுடியும்.
அதேபோல வாய்ப்பில்லாமல் ஓர் அணியில் இருக்கும் வீரர் போட்டியின் பாதியிலேயே இன்னொரு அணிக்கு மாறுகிற விதிமுறையையும் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, முதல் 7 போட்டிகளில் 2-ல் மட்டுமே விளையாடிய வீரர், வேறொரு அணிக்கு மாறிக்கொள்ள அனுமதி அளிக்கப்படும்.
அடுத்த ஐபிஎல் பொதுக்குழுக் கூட்டத்தில் இந்த இரு முடிவுகள் குறித்து மேலும் விவாதிக்கப்படும் என சுக்லா தெரிவித்துள்ளார்.