தைவானில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் திவிஜ் சரண் ஜோடி ஆடவர் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியது.
போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவின் திவிஜ் சரண்-அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி ஜோடி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தைவானின் வைல்டு கார்டு ஜோடியான ஜுய் சென் ஹங்-செங் யு யுவை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. திவிஜ் சரண் ஜோடி தனது காலிறுதியில் தைவானின் மற்றொரு வைல்டு கார்டு ஜோடியான யு சியு லு-டுங் லின் வுவை எதிர்கொள்கிறது.
இதனிடையே, இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சுமித் நாகல் ஆகியோர் தங்களது முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
இதில் யூகி பாம்ப்ரி தனது முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனிடன் 3-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டார். மற்றொரு முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் ருமேனியாவின் மேரியஸ் கோபில் 4-6, 2-6 என்ற செட் கணக்கில் இந்தியாவின் சுமித் நாகலை வீழ்த்தினார்.
இதேபோல், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் விஷ்ணுவர்தன்-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி தனது முதல் சுற்றில் 2-6, 4-6 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஜேம்ஸ் செரடானி-ஆஸ்திரேலியாவின் மார்க் போல்மான்ஸ் ஜோடியிடம் வீழ்ந்தது.