இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகக் கூறி, இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா 6 சர்வதேச ஆட்டங்களில் விளையாட தடை விதித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அத்துடன், இந்த ஆண்டுக்கான அவரது ஒப்பந்த ஊதியத்தில் 20 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.
அவர் எந்த மாதிரியான தவறான நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பதை இலங்கை கிரிக்கெட் வாரியம் தெளிவுபடத் தெரிவிக்காத நிலையில், களத்துக்கு வெளியே அவர் தவறான முறையில் நடந்துகொண்டதாக அணியின் மேலாளர் அசன்கா குருசின்ஹா கூறியுள்ளார். அவர் அளித்த அறிக்கையின் பேரிலேயே தனுஷ்காவுக்கு எதிரான இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, அபு தாபியில் அடுத்த வாரம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மோதவுள்ள இலங்கை அணியில் இருந்து தனுஷ்கா குணதிலகா நீக்கப்பட்டுள்ளார்.
அணி விபரம்: உபுல் தரங்கா (கேப்டன்), தினேஷ் சண்டிமல், நிரோஷன் டிக்வெல்லா, லாஹிரு திரிமானி, குசல் மென்டிஸ், மிலிண்டா சிறிவர்தனா, சமரா கபுகேதரா, திசர பெரேரா, சீகுகே பிரசன்னா, நுவான் பிரீப், சுரங்கா லக்மல், துஷ்மந்தா சமீரா, விஷ்வா ஃபெர்னாண்டோ, அகிலா தனஞ்ஜெயா, ஜெஃப்ரி வான்டர்சே.